நிவர் புயல் காரணமாக ஜி.ஆர்.கே. குழுமம் தனது சொந்தமான 3 திரையரங்குகளில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் கடலூர் நகரில் கிருஷ்ணாலயா, கமலம், வேல்முருகன் ஆகிய திரையரங்குகளை நடத்தி வருகிறது. இக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். துரைராஜ் செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், நிவர் புயலை முன்னிட்டு தாழ்வான பகுதியில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் வசிப்போர் இந்த 3 திரையரங்குகளிலும் தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஜெனரேட்டருடன் கூடிய மின்சார வசதி செய்துத் தரப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தினமணி நிருபரிடம் கூறுகையில், "சாலையோரங்கள், ஆற்றின் அருகில் வசிப்போருக்கு பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடியுமா என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதனைத் தொடர்ந்து எங்களது 3 தியேட்டர்களிலும் தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளோம். அங்கு தங்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர், கழிவறை வசதியும் உள்ளதால் உண்மையாக பாதிக்கப்படுவோர் இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, 93440 35226, 97895 76800 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
புயல் கரையைக் கடந்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் வரையில் அவர்கள் தங்கிக் கொள்ளலாம்" என்றார் ஜி.ஆர். துரைராஜ்.
கரோனா பொதுமுடக்கத் தளர்வினைத் தொடர்ந்து திரையரங்குகள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்த போது இவர் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான கிருஷ்ணாலயா திரையரங்கில் தீபாவளி பண்டிகை வரையில் இலவசமாக திரைப்படங்களைத் திரையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.