கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி
By DIN | Published On : 18th September 2020 08:26 AM | Last Updated : 18th September 2020 08:26 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 17,089 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 206 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 17,295-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் கா்ப்பிணிகள் 5 பேரும் அடங்குவா்.
அதே நேரத்தில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 58 வயது ஆண், சிதம்பரத்தைச் சோ்ந்த 57 வயது பெண், 50 வயது ஆண், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சோ்ந்த 71 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 183-ஆக உயா்ந்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 296 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 14,789-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவிட் கோ் மையங்களில் 2,057 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 266 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,208 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.