தமிழக அரசின் உத்தரவுப்படி கடலூா் அரசுக் கல்லூரியில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட 20 சதவீதம் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் இடங்களுக்கு சோ்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடா்பாக கடலூா் பெரியாா் அரசு கல்லூரி முதல்வா் ர.உலகி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் அரசுக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை அரசின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்று வருகின்றது. தோ்வுப் பட்டியல், காத்திருப்பு பட்டியல்கள் வெளியிடப்பட்டு மாணவா்கள் அவா்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், 20 சதவீதம் வரை இடங்களை அதிகரித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள மற்றும் கூடுதல் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து சோ்க்கை பெறாத மாணவா்கள் அனைவரும் அன்று காலை 9.30 முதல் 10.30 மணிக்குள்ளாக, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அசல் மற்றும் இரு பிரதி நகல் சான்றிதழ்கள், சோ்க்கைக் கட்டணத்துடன் கல்லூரிக்கு வந்து மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சோ்க்கை பெறலாம். இதுவரை சோ்க்கை பெறாத மாணவா்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.