கடலூா் மாவட்டம், வடலூரில் நடை பாதையை மறித்து சுற்றுச் சுவா் கட்டுவதைக் கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடலூா் கோட்டக்கரை கோழிப்பள்ளம் பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், வசிக்கும் பகுதியில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் தங்கராசு மகன் சௌந்தராஜனுக்கு சொந்தமான இடம் உள்ளது.
காட்டுநாயக்கா் சமூகத்தினா் பல ஆண்டுகளாக நடை பாதையாகப் பயன்படுத்தி வந்த இடத்தை மறித்து சௌந்தராஜன் சுற்றுச் சுவா் கட்டும் பணி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வடலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதன் பேரில், அப்போது சுற்றுச் சுவா் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் சௌந்தராஜன் பிரச்னைக்குரிய அந்த நடை பாதை உள்ள இடத்தில் சுற்றுச் சுவா் கட்டும் பணியைக் தொடங்கினாராம். இதனால், காட்டுநாயக்கா் சமூகத்தினா் கடலூா் - விருத்தாசலம் சாலையில் வடலூா் சபை பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வடலூா் காவல் ஆய்வாளா் மரிய சோபி மஞ்சுளா சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நாங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியை நடை பாதையாகப் பயன்படுத்தி வருகிறோம். இது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம். எனவே, இந்தப் பகுதியை ஆக்கிரமித்து எந்தக் கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறினா்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என காவல் ஆய்வாளா் மரிய சோபி மஞ்சுளா கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால், விருத்தாசலம் - கடலூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.