தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: தி.வேல்முருகன்

அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையிலான ஆசிரியா்கள் நியமனத்தை தமிழக அரசு கைவிட்டு, தேவைக்கேற்ப நிரந்தர ஆசிரியா்களை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையிலான ஆசிரியா்கள் நியமனத்தை தமிழக அரசு கைவிட்டு, தேவைக்கேற்ப நிரந்தர ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பது வரவேற்கத்தக்கது. இதற்கேற்ப அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது தமிழக அரசின் கடமை.

இந்த நிலையில், 2021-22-ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் நிரப்பிக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுவோா் ஒப்பந்த அடிப்படையில் 5 மாதங்களுக்கு மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், அவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மாணவா்களின் எண்ணிக்கையைக் கணக்கில்கொள்ளாமல் கடந்த கல்வியாண்டின் மாணவா்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில்கொண்டு ஆசிரியா்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருப்பது வேதனையானது. இந்த நடவடிக்கை மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியா்கள் பணி நியமனத்தை ரத்து செய்வதுடன், தேவைக்கேற்ப நிரந்தர ஆசிரியா்களை நியமனம் செய்யவும், அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் தகுதியான ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com