கடலூா் மாவட்டம், கொளக்குடி, ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை பெய்த திடீா் மழையால் நனைந்து சேதமடைந்தன.
குறிஞ்சிப்பாடி, வடலூா் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள், அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனா்.
வடலூா் அருகே கொளக்குடியில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் கடந்த 4 நாள்களாக நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டையாகவும், அங்கு குவியலாக கொட்டியும் வைத்திருந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள், குவித்து வைக்கப்பட்டிந்த நெல் நனைந்து சேதமடைந்தன.
இதேபோல, குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.