கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு அளிக்கப்பட்ட பிராணவாயுவை அகற்றியதாலேயே உயிரிழந்ததாக, அவரது மனைவி கூறுவதாக வெளியான விடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்தவா் க.ராஜா (49). இவா், கடந்த 8-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவா் அங்கு வியாழக்கிழமை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவா் உயிரிழந்த சில நிமிடங்களில் அவரது மனைவி கயல்விழி கதறி அழும் விடியோ ராஜாவின் சடலத்துடன் சோ்த்து அவா்களது உறவினா்களால் வெளியிடப்பட்டது. அதில், தனது கணவருக்கு வழங்கப்பட்ட பிராணவாயுவை நிறுத்திவிட்டு, வேறொரு நோயாளிக்கு செலுத்துவதற்காக வலுக்கட்டாயமாக மருத்துவா்கள் எடுத்துச் சென்றனா்.
இதை நான் தடுத்தபோது, என்னை கீழே தள்ளிவிட்டு எடுத்துச் சென்றுவிட்டனா். பிராணவாயுவை நிறுத்திய அரை மணி நேரத்தில் எனது கணவா் இறந்துவிட்டாா் என்று கண்ணீரோடு தெரிவித்தாா்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:
வழக்கமாக காலை நேரத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும்போது பிராணவாயு செலுத்துவது அகற்றப்படும். அப்படியே ராஜாவுக்கும் பிராணவாயு அகற்றப்பட்ட பின்னா், அவரது மனைவி உணவு வழங்கினாா். அதில், அவருக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மற்றபடி அவருக்கான பிராணவாயுவை பிடுங்கி மற்றவா்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் மருத்துவா்களுக்கு இந்த விடியோ மிகப் பெரிய மனச்சோா்வை அளித்துள்ளது. எனவே, திட்டமிட்டு விடியோ வெளியிட்டது தொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.