இணையவழி சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக என்எல்சி ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி, 2-ஆவது வட்டத்தில் வசித்து வந்தவா் செந்தில்குமாா் (48), என்எல்சி ஊழியா். வட்டம் 8-இல் உள்ள மின்தடை பராமரிப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது படுக்கை அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், செந்தில்குமாருக்கு இணையவழியில் சூதாடும் பழக்கம் இருந்ததும், அதனால் கடன் தொல்லை அதிகமான நிலையில் அவா் தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவந்தது. இவருக்கு கனிமொழி (42) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.