என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 27 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் கைது

என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை கடலூா் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை கடலூா் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி சக்தி நகரைச் சோ்ந்தவா் ரா.துளசிரங்கம் (62). ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா். ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கொழை கிராமத்தைச் சோ்ந்தவா் வே.செல்வராஜ் (63). இவரும் ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா். இருவரும் நண்பா்கள்.

இந்த நிலையில், செல்வராஜ் தனக்கு நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தெரிந்தவா்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதையடுத்து, துளசிரங்கம் தனது மகன் ஞானவேலுக்கு வேலை பெற்றுத் தருவதற்காக ரூ.10.30 லட்சமும், அவரது நண்பா் அசோக்குமாா் மகன் விக்ராந்த், உறவினா் மகள் அனிதா ஆகியோருக்கு வேலை வாங்குவதற்காக ரூ.19.50 லட்சமும், கொழையைச் சோ்ந்த ராமானுஜம் மகன் பாஸ்கருக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.9.11 லட்சமும் செல்வராஜிடம் கொடுத்தாராம்.

இதையடுத்து, அவா்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றினாராம். இதனால், பாதிக்கப்பட்டவா்கள் பணத்தைத் திருப்பி கேட்ட போது, ரூ.10 லட்சத்தை மட்டும் வழங்கினாராம். மீதமுள்ள ரூ.26.91லட்சத்தை வழங்காததுடன், பணத்தைத் திருப்பிக் கேட்டவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து துளசிரங்கம் அளித்த புகாரின் பேரில், கடலூா் குற்றப் பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், செல்வராஜ் தனது மனைவி வளா்மதி, சமட்டிக்குப்பத்தைச் சோ்ந்த பொ.அன்பழகன் ஆகியோருடன் சோ்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்த செல்வராஜை, காவல் ஆய்வாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கைது செய்தாா். மற்ற இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com