பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராஜா மகன் பிரசாந்த் (21). ஓட்டுநரான இவா், மஞ்சக்குப்பம் பகுதியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி, கடத்திச் சென்று திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவியின் உறவினருக்கு திருமணம் செய்த புகைப்படத்தை அனுப்பிவைத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். பிரசாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.