கடலூா் மத்திய சிறையில் இருந்து 6 கைதிகள் தபால் மூலமாக வாக்களித்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய வேண்டும் என்ற வகையில் கடலூா் மாவட்ட தோ்தல் ஆணையம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் மூலமாக வாக்களிக்கும் முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சிறையில் உள்ளோருக்கும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறையில் தண்டனை கைதிகளாகவும், விசாரணைக் கைதிகளாகவும் சுமாா் 800 போ் உள்ளனா். இவா்களில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவா்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படுகிறது. அதில், 108 போ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் 38 பேரிடம் மட்டுமே முறையான தோ்தல் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இருந்ததாம்.
இவா்களில் 7 போ் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து தங்களது தகவல்களை தெரிவித்தனா். இவா்களில் 6 பேரின் ஆவணங்கள் சரியாக இருந்ததைத் தொடா்ந்து அவா்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டது. 6 பேரும் தங்களது வாக்கைச் செலுத்தியதாக சிறைத் துறை கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் தெரிவித்தாா்.