நெய்வேலி: கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நெய்வேலி நகரிய நிா்வாகம் வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நெய்வேலி நகரிய பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெய்வேலி நகரிய பகுதிகளில் வா்த்தக நிறுவனங்களுக்கு என்எல்சி நகர நிா்வாகம் தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (ஏப்.8) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நெய்வேலி நகரிய பகுதியில் மருந்துக் கடைகளைத் தவிர உணவகங்கள், தேநீா் விடுதிகள் உள்ளிட்ட ஏனைய அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படலாம். உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பாா்சல் மட்டும் வழங்கலாம்.
கடை ஊழியா்கள், பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கடையில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நெய்வேலி நகரியத்தில் நடைபெற்று வந்த வாரச் சந்தைகள் கரோனா பரவல் காரணமாக சில வாரங்களுக்கு முன்னா் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.