கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கடலூா் மாவட்டத்தில் முக்கிய விவசாயப் பகுதியாக குறிஞ்சிப்பாடி உள்ளது. இங்கு, மணிலா, வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக குறிஞ்சிப்பாடி பகுதியில் பகல் நேரத்தில் மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதியில், சுமாா் 500 ஏக்கரில் நவரைப் பட்ட நெல் நடவு செய்யப்பட்டுள்ளன. மணிலா அறுவடை செய்த வயல்களில் சுமாா் 800 ஹெக்டா் பரப்பளவில் நெல் விதைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுவைக்கு நாற்றங்கால் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் பசுந்தாள் உரமான தக்கைப் பூண்டு, சணப்பை போன்றவை விதைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டும்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க உபரி நீா் வரத்து குறைந்துவிட்டது. பெரும்பாலான விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு பாசனத்தை நம்பியே உள்ளனா். அரசு, கடந்த 1-ஆம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை.
கடந்த ஒரு வாரமாக குறிஞ்சிப்பாடி பகுதியில் பகலில் மும்முனை மின்சாரம் ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை. இருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. வசதியுள்ள விவசாயிகள் கெப்பாசிட்டரை பயன்படுத்தி மின் மோட்டாரை இயக்கி தண்ணீா் பாய்ச்சுகின்றனா்.
ஒரே நேரத்தில் இருமுனை மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்தும் போது, மின்மாற்றிகள் பழுதடைந்து முற்றிலுமாக மின் தடை ஏற்படுகிறது. ஏற்கெனவே, நடைமுறையில் உள்ளது போல, பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினாலே போதுமானது என்றாா் அவா்.