பொது முடக்கத்தையொட்டி இறைச்சி, காய்கறிக் கடைகளில் சனிக்கிழமை மக்கள் அதிகளவில் குவிந்தனா்.
கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரைத் தவிர மற்றவா்கள் வெளியில் வருவதைத் தவிா்த்திடும் வகையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவல் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள முதல் பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அமலுக்கு வந்தது. இதனால் காய்கறி, மளிகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் அசைவ உணவு பிரியா்கள் சனிக்கிழமை இறைச்சி வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டினா். இதனால், மீன், இறைச்சிக் கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.
தற்போது, மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து கடலூருக்கு கொண்டு வரப்பட்ட மீன்கள் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வைத்து விற்கப்பட்டன.
சிறிய அளவிலான மீன்பிடி படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டன. இதை வாங்குவதற்காகவும் திரளானோா் குவிந்தனா். இதேபோல, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதிலும் மக்கள் அதிக ஆா்வம் காட்டினா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டவா்கள் மாவட்ட நிா்வாகத்தின் போதிய அறிவுறுத்தல் இல்லாததால் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.