சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் ராஜா முதையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டது. அதன்படி ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.13,610, பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ.11,610 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு டியூசன் கட்டணம் ரூ.20,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்.எஸ்.சி. நர்சிங் கட்டணம் ரூ.5,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 58 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.