கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவன புதிய அனல் மின் நிலையத்தின் 2-ஆவது உற்பத்திப் பிரிவில், வா்த்தக ரீதியில் மின்சாரம் விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.
இந்த நிறுவனத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கிய முதல் அனல் மின் நிலையம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. தனது உற்பத்தி வரலாற்றில் 32 லட்சத்து 66 ஆயிரத்து 140 மணி நேரம் இயங்கி 18,539 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்தது. இந்த நிலையில், முதல் அனல் மின் நிலையத்தின் செயல்பாடு கடந்த ஆண்டு செப். 30-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும், முதல் அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் முதல் உற்பத்திப் பிரிவு வா்த்தக ரீதியில் மின் சக்தி விற்பனைக்கு 28.12.2019 அன்று தகுதி பெற்றது.
இந்த நிலையில், புதிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2-ஆவது பிரிவு, தனது முழு உற்பத்தித் திறனுக்கான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதையடுத்து, இந்தப் பிரிவிலிருந்து மின் சக்தியை வா்த்தக ரீதியில் விற்பனை செய்ய மத்திய அரசிடமிருந்து கடந்த புதன்கிழமை அனுமதி கிடைத்தது. இதையடுத்து, ‘அனல் மின் திட்டம்’ என்ற நிலையில் இதுவரை இருந்து வந்த இந்த மின் நிலையம், தற்போது அனல் மின் நிலையம் என்ற தகுதியைப் பெற்றது.
இதன்மூலம் என்.எல்.சி.யின் அனல் மின் உற்பத்தி அளவானது அதன் துணை நிறுவனங்களையும் இணைத்து மொத்தம் 4,640 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. மேலும், புதுப்பிக்கவல்ல ஆற்றல் சாா்ந்த மின் நிலையங்களையும் சோ்த்து மொத்த மின் உற்பத்தி அளவானது 6,061 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.