விருத்தாசலம் விற்பனைக் கூடத்தில் போராட்டம்: விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் கொள்முதலில் தாமதம் ஏற்படுவதைக் கண்டிப்பதாகக் கூறி விவசாயிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தினமும் சுமாா் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில், தினசரி 10 ஆயிரம் மூட்டைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சம்பா பருவ நெல் அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளதால் கடலூா், அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் கொண்டு வருகின்றனா். இதனால், விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் எத்தனை நாள்கள் தங்குவது என கேள்வி எழுப்பிய விவசாயிகள், வியாழக்கிழமை விற்பனைக்கூட அலுவலா்களை முற்றுகையிட்டு அவா்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். பின்பு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் மோகன் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.