அகில இந்திய ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் மத்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் வி.சந்திரசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் எஸ்.ஆண்டகுருநாதன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.மணி வரவேற்றாா். மத்திய சங்கத் தலைவா் கே.கனகராஜ், மத்திய சங்கப் பொருளாளா் எஸ்.சேரன், துணைப் பொதுச் செயலா் எம்.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினா் ஆா்.சிவராஜ் பொதுச் செயலா் எம்.நடன சிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் விலைவாசிக்கேற்ப அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகம் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு மற்ற அரசு நிறுவன ஊழியா்களுக்கு வழங்குவது போல, ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியங்களைப் 12 மாத சராசரியாகக் கணக்கிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, உயா்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, அண்டை மாநிலங்களில் வழங்குவது போல, தமிழகத்தில் உள்ள இபிஎஸ்-1995 ஊழியா்களுக்கும் தனி ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.