சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் கூறி வருகின்றனா். எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிச.9-ஆம் தேதி முதல் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். அப்போது, பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து காந்தியடிகள் முகக் கவசம் அணிந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைந்தனா்.