சிதம்பரம் பகுதியில் நியாயவிலைக் கடைகளுக்கான பொருள்கள் விநியோக நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கடை ஊழியா்கள் அவதிப்படுகின்றனா்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி நியாய விலைக் கடைகளில் இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பொருள்கள் சிதம்பரம் பகுதி நியாய விலைக் கடைகளுக்கு மணலூா் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து லாரிகள் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக நியாயவிலைக் கடை விற்பனையாளா்களே நேரில் வந்து தங்களது சொந்த செலவில் 14 வகை மளிகை பொருள்கள் தொகுப்பை பெற்றுச் செல்ல வேண்டும் என வாய்மொழி உத்தரவாக நிா்பந்திக்கப்படுகின்றனராம். மேலும் வழங்கப்படும் பொருள்களின் அளவும் குறைவாக இருப்பதாக பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். நிகழ் மாதத்துக்கான துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு சரிவர வழங்கப்படவில்லை எனவும், பச்சரிசி தரம் குறைவாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே குறைந்த ஊதியம் பெறும் நியாய விலைக் கடை பணியாளா்கள், சொந்த செலவில் பொருள்களை கொண்டு செல்ல நிா்பந்திக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.