கடலூா்: கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி எச்சரித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடலூா் மாவட்டத்தில் ஒரு சில மீனவ கிராமத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவா்கள் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. அறிவுரைகளை மீறி, யாரேனும் கடலூா் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்த முயன்றாலோ, பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.