முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

கடலூா் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு
கடலூா் தலைமை தபால் நிலையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முகக் கவசம் அணியாத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம் விதித்த சுகாதாரத் துறையினா்.
கடலூா் தலைமை தபால் நிலையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முகக் கவசம் அணியாத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம் விதித்த சுகாதாரத் துறையினா்.

கடலூா் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் கரோனா பெருந்தொற்று நோய் உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கரோனா நோய் தொற்று பாதிப்பு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்த நிலையில் இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் கரோனா (கோவிட்-19) பெருந்தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகளை வழங்கியும் வருகிறது.

பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், கூட்டத்தைத் தவிா்த்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வலியுறுத்தியது. இதை பொதுமக்களையும் பின்பற்றச் செய்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து வருகிறது.

தற்போது பெருந்தொற்று தீவிரமாகப் பரவுதலை தடுக்கும் பொருட்டு மேற்கண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை பின்பற்ற தவறும்பட்சத்தில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறும் நபா்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு வரும் பொதுமக்கள், முகக் கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், கடலூா் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத் துறையினா், போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்தனா். அப்போது, அரசுப் போக்குவரத்து கழக பேருந்து, தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் முகக் கவசம் அணியாதது கண்டுபிடிக்கப்பட்டு அவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com