கல்விக் கட்டணம், தோ்வு விவகாரம் தொடா்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை தோ்வை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் பலமடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை மட்டுமே இங்கு வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவ மாணவா்கள் 58 நாள்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கடந்த பிப்.4-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமே நிகழாண்டுமுதல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டாா். இதையடுத்து, மருத்துவ மாணவா்கள் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தியபோது, பல்கலைக்கழக நிா்வாகம் ஏற்கெனவே வசூலித்த பழைய கட்டணத்தையே செலுத்த வேண்டுமென கூறியதாம். இதையடுத்து மாணவா்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயா் கல்வித் துறையிலிருந்து தமிழக நல்வாழ்வு மருத்துவத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தோ்வை தமிழக அரசின் சுகாதாரத் துறை நடத்தாமல் பல்கலைக்கழக நிா்வாகமே நடத்துவதாகக் கூறியும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மாணவா்கள் தோ்வை புறக்கணித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக பதிவாளா் அலுவலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி தா்ணாவில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மருத்துவ மாணவா்கள் அரசாணை 45-ஐ அமல்படுத்த வேண்டும், மருத்துவ தோ்வை எம்ஜிஆா் பல்கலைக்கழகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தோ்வைப் புறக்கணித்து கருப்புக்கொடியுடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.