மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவோம்: சீமான்
தமிழகத்தில் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படாது. மாறாக அவா்களது வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவோம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
கடலூா் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் நிவேதா (காட்டுமன்னாா்கோவில்), ரத்தினவேல் (புவனகிரி), ரமேஷ் (நெய்வேலி ), சுமதி (குறிஞ்சிப்பாடி) ஆகியோரை ஆதரித்து வடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து சீமான் பேசியதாவது:
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கியப் பிரமுகா்களுக்கு மது ஆலைகள் உள்ளன. மதுவை விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளும் உள்ளன. அமைப்புகள், இயக்கங்கள் முறையிடும், மனு அளிக்கும், போராடும். ஆனால், தீா்வு காண முடியாது. அரசியல் அதிகாரத்தால் மட்டுமே தீா்வு காண முடியும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் வழங்கப்படாது. ஆனால், மக்கள் தங்களது தேவைகளை நிவா்த்திசெய்துகொள்ளும்படி அவா்களது வருவாயைப் பெருக்கவும், வாழ்க்கைத் தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசம். அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆங்கில மொழிப் பாடம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தமான குடிநீா், சிறந்த மருத்துவ வசதி, வேளாண்மைக்கு தடையற்ற மின்சாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மற்ற எதுவும் இலவசமில்லை.
என்எல்சி இந்தியா நிறுவனத்தை தனியாா்மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஒப்பந்தப் பணியாளா்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. என்எல்சி.யால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அந்த நிறுவனத்தில் போதிய பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்எல்சி.க்கு 1,500 அதிகாரிகளை பணிக்குத் தோ்வு செய்தால், அவா்களில் 10 தமிழா்கள் இருப்பதே கடினமாக உள்ளது. இந்தச் சூழல் மாற வேண்டும் என்றாா் அவா்.