தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன், தலைவா் பி.கே.சிவக்குமாா், பொதுச் செயலா் இரா.கோபிநாத், பொருளாளா் கு.சரவணன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காத்திட பல்வேறு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதல்வருக்கு சங்கத்தின் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கிறோம்.
கரோனா தடுப்பூசிகள், கூடுதல் படுக்கைகள், பிராணவாயு தேவைக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கு நிதிச் சுமையும் அதிகரித்திருப்பது வருத்தமளிக்கிறது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசுப் பணியாளா்களும் தமிழக அரசின் இன்னல்களை ஓரளவு களையும் வகையில் மே மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்கிட இசைவு தெரிவிக்கிறோம். எங்களது சங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்று அதற்குரிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.