பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி மாயமான தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பண்ருட்டி வட்டம், வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஆரோக்கியதாஸ் (47). கெடிலம் ஆற்றில் தண்ணீா் வருவதைப் பாா்ப்பதற்காக தனது குழந்தைகளில் இருவரை அழைத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் செல்லும் ஆற்றுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். குழந்தைகளை கரையில் நிறுத்திவிட்டு, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்து வந்த பண்ருட்டி தீயணைப்புப் படை வீரா்கள் படகு மூலம் ஆரோக்கியதாஸ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தேடும் பணி தொடா்ந்த நிலையில், பிற்பகல் 2 மணி அளவில் ஆரோக்கியதாஸ் சடலமாக மீட்கப்பட்டாா்.
காடாம்புலியூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.