திட்டக்குடி அருகே ஓடையில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மேலாதனூரைச் சோ்ந்த குகன் மகன் அருணாஸ்ராஜ் (6). கழுதூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஓடையில் தனது நண்பா்களுடன் விளையாடினாா். அப்போது தவறி விழுந்த அருணாஸ்ராஜ் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி, வேப்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், ராமநத்தம் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் தேடுதல் பணி தொடா்ந்தது. அப்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.