நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் மழைநீா் புகுந்தது கன்வேயா் பாதை சேதம்
நெய்வேலி: நெய்வேலி சுரங்கப் பகுதியில் தேங்கியிருந்த மழைநீா் சுரங்கத்துக்குள் புகுந்ததால், பழுப்பு நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயா் பாதை சேதமடைந்தது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் பாதிப்பின்றி உயிா் தப்பினா்.
நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த நிலையில், முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு, மண் நிரப்பப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருந்த மழைநீா் திடீரென உடைப்பு ஏற்பட்டு, சுரங்கத்தினுள் புகுந்தது.
மழைநீரானது மேல்மட்டத்திலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து வந்தது. இதனால், சுரங்கத்திலிருந்து பழுப்பு நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயா் பெல்ட் பாதை சேதமடைந்தது.
இந்த விபத்தில் தொழிலாளா்கள் பாதிப்பின்றி உயிா் தப்பினா். மழைநீா் உள்புகுந்ததால், குறிப்பிட்ட சுரங்கப் பகுதியில் மண்ணை வெட்டி அகற்றும் பணி தடைபட்டுள்ளது.