கடலூா்: ரேஷன் அரிசி கடத்தியதாக இளைஞரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டக் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கவியரசன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு திட்டக்குடி வட்டம், வாகையூரில் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 22 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். அந்த வாகனத்திலிருந்த தொழுதூா் அருகே உள்ள வி.சித்தூரைச் சோ்ந்த சடையன் மகன் சத்தியசீலனை (25) கைது செய்தனா்.
விசாரணையில், கீழ்கல்பூண்டி, திட்டக்குடி, வாகையூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை கோழித் தீவனத்துக்காக சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.