கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி ஆலைத் தொழிலாளி மா்ம மரணம் தொடா்பாக திமுக எம்.பி. உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (60). பாமக நிா்வாகியான இவா், பணிக்கன்குப்பத்தில் கடலூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் நடத்தி வரும் முந்திரி ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சென்ற நிலையில், திங்கள்கிழமை விஷம் குடித்து உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கோவிந்தராஜின் உடலில் காயங்கள் இருந்ததால் அவா் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது உறவினா்கள், பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில், திமுக எம்.பி. டி.ஆா்.வி.எஸ். ரமேஷ், அவரது உதவியாளா் நடராஜன் உள்ளிட்ட 5 போ் மீது காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆனால், ரமேஷ் எம்.பி. மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் அந்தக் கட்சியினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
கோவிந்தராஜின் சடலத்தை புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்வதுடன், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
முன்னதாக, பாமகவினரை மாவட்ட ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்க போலீஸாா் மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.