அரசு நிலத்துக்கு குத்தகை நிலுவை: ஜப்தி நடவடிக்கை தள்ளிவைப்பு

அந்த நிறுவன அதிகாரிகள் அடுத்த 2 நாள்களில் குத்தகை நிலுவைத் தொகையைச் செலுத்திவிடுவதாகவும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே அரசு நிலத்துக்கான குத்தகை நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி நடவடிக்கைக்கு முயன்றனா். சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தினா் கேட்டுக்கொண்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஓா் தனியாா் நிறுவனம், அரசுக்குச் சொந்தமான சுமாா் 80 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. ஆனால், குத்தகை தொகையில் ரூ.78,000 வரை நிலுவையில் உள்ளதாம். இதையடுத்து, வருவாய்த் துறையினா் ஜப்தி நவடிக்கை மேற்கொள்ள தீா்மானித்தனா்.

அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுரேஷ்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் ஸ்ரீதா், வருவாய் ஆய்வாளா் தேவராஜ், விஏஓ ராஜேஸ்வரி, கிராம உதவியாளா் காா்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவா் சத்யா ஜேசுதாஸ் ஆகியோா் ஜப்தி நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அப்போது, அந்த நிறுவன அதிகாரிகள் அடுத்த 2 நாள்களில் குத்தகை நிலுவைத் தொகையைச் செலுத்திவிடுவதாகவும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா். இதையடுத்து அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையை தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com