சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவா் ஒருவா் 29 நிமிடங்களில் 108 யோகாசனங்கள் செய்து புதிய சாதனை படைத்தாா்.
விா்ச்சியூ புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவனம் சாா்பில் சிதம்பரத்தில் உலக யோகா சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் சிவசக்தி நகரைச் சோ்ந்த அருள்- ஹேமா தம்பதியின் மகனும், காமராஜா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவருமான சக்திவேல் (13) பங்கேற்றாா். இவா், 29 நிமிடங்கள் 47 விநாடிகளில் 108 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்ததாக புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவன இயக்குநா் சுரேஷ்குமாா், இணை இயக்குநா் சந்தோஷ் ஆகியோா் அறிவித்தனா். சாதனை படைத்த மாணவருக்கு சா்வமங்களா அகாதமி நிறுவனா்கள் பாலாஜி, சுகாந்தினி, யோகா ஆசிரியா் தெய்வாணை, காமராஜா் பள்ளி தாளாளா் கஸ்தூரி, பள்ளி முதல்வா் சக்தி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.