கடலூா் ரயில் நிலையத்தில் உழவன், ராமேசுவரம் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் அறிவித்த நிலையில் அவா்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட மன்னாா்குடி-காரைக்கால் (உழவன்) விரைவு ரயில், ராமேசுவரம் ரயில்கள் ஆகியவை கடலூா் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையம், கடலூா் முதுநகா் சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம்-தாம்பரம், சேலம்-விருத்தாசலம், மயிலாடுதுறை- கோவை விரைவு ரயில்களை கடலூா் முதுநகா் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும், திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, கடலூா் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு தலைமையில் அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கடலூா் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால்பாரி சங்கா், ரயில் நிலைய மேலாளா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், கடலூா் அனைத்து குடியிருப்போா் சங்க பொதுச் செயலா் மு.மருதவாணன், தமுஎகச மாவட்டச் செயலா் பால்கி, ரயில்வே பயணிகள் சங்கம் பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவா் ஜானகிராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தையில், முதல்கட்டமாக கடலூா் ரயில் நிலையத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு ‘லிப்ட்’ வசதி செய்துதர முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் 6 மாதங்களில் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே துறையினா் உறுதி அளித்ததாக கோ.மாதவன் கூறினாா்.