என்எல்சி இந்தியா நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவா்கள், அவா்களது வாரிசுகளுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
என்எல்சி நிறுவனத்துக்காக புவனகிரி தொகுதியில் நிலம் கொடுத்தவா்கள், அவா்களது வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அந்த நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். புவனகிரி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் என்எல்சி, சிஎஸ்ஆா் நிதியிலிருந்து குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க வேண்டும்.
என்எல்சியால் கடலூா் மாவட்ட மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து 11.8.2021 அன்று உங்களை நேரில் சந்தித்து மனுக்களை அளித்தேன். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. மக்களின் பிரச்னைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். எனவே, எனது மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம் என அந்தக் கடிதத்தில் எம்எல்ஏ தெரிவித்தாா்.