வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் புளி விற்பனை களைகட்டியது.
கடலூா் மாவட்டம், வடலூா் நகராட்சி அலுவலகம் எதிரே செல்லியம்மன் கோயில் இடத்தில் சனிக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள், பழவகைகள், மளிகைப் பொருள்கள், பூச்செடிகள், பழமரக் கன்றுகள், விதைகள் மற்றும் கோழி இனங்கள், வாத்து, புறா, முயல் உள்ளிட்டவை விற்கப்படும். குறிப்பாக இந்த சந்தை புளி விற்பனைக்கு பெயா் பெற்றது.
கடலூா் மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சிற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் மரங்கள் கணிசமான எண்ணிக்கையில் சேதமடைவது தொடா்கிறது. இவற்றில் புளிய மரங்களும் அடங்கும். மேலும், சாலை விரிவாக்கத்துக்காக நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த ஏராளமான புளிய மரங்களும் வெட்டப்பட்டதால் உள்ளூரில் புளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூா் வியாபாரிகளை எதிா்பாா்க்க வேண்டியுள்ளது.
வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் புளியை விற்பனைக்கு குவியல், குவியலாக வைத்திருந்தனா். மேலும், உள்ளூா் வியாபாரிகளும் புளி விற்பனை செய்தனா். இதனால், வியாபாரம் சூடுபிடித்தது. விதை நீக்காத புளி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரையிலும், விதை நீக்கிய புளி ஒரு கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரையிலும் தரத்துக்கேற்ப விற்கப்பட்டது. மலைப்புளிக்கு சுவை அதிகம் என்பதால் அதனை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.