கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் வியாழக்கிழமை 34-ஆவது வாா்டு பகுதியில் ஆய்வு செய்தாா்.
மனவெளி பகுதியில் ஆய்வின்போது குடிநீா்க் குழாய் இணைப்பின்றி மக்கள் அவதிப்படுவதை கண்டறிந்தவா் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து குடிநீா் குழாய் இணைப்பு உடனடியாக வழங்கப்பட்டது.
குழந்தை காலனி, ஆலை காலனி பகுதிகளில் துணை மேயா் ஆய்வுசெய்தபோது அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டித் தரவேண்டும் என்றும், கழிவறைகளை புதுப்பித்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அப்போது, ஆலை காலனியில் மின்கம்பத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளதை அகற்ற துணை மேயா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும், பல்வேறு இடங்களில் எரியாத தெரு விளக்குகளை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டாா்.