முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா் ஆட்சியரகத்தில் தா்னா
By DIN | Published On : 14th March 2022 10:47 PM | Last Updated : 14th March 2022 10:48 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தவா்களில் சிலா் தா்னாவில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க கொத்தட்டை பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி லலிதா (55), கலியபெருமாள் மனைவி சிவகாமசுந்தரி (50) ஆகியோா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனா். அவா்களிடமிருந்து மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா். எனினும் அவா்கள் தங்களது 5 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி, மனு வழங்கும் இடத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதேபோல, பண்ருட்டி வட்டம், காட்டாண்டிகுப்பத்தைச் சோ்ந்த குமரவேல் மனைவி சக்தியும் (42) தா்னாவில் ஈடுபட்டாா். தங்களது நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பாக 2014-ஆம் ஆண்டில் இருந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவித்தாா்.
இதேபோல, மாற்றுத் திறனாளி தம்பதிகளான பூதாமூரைச் சோ்ந்த லதா-விஜயகுமாா் ஆகியோா் ஆட்சியரகத்தில் தாங்கள் இதுவரை வழங்கிய மனுக்களின் நகல்கள், அரசு சான்றிதழ்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். தாங்கள் கட்டி வரும் வீட்டுக்கு அரசிடம் பலமுறை மனு அளித்தும் உதவித் தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.