கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் விருத்தாம்பிகை அம்மன் சந்நிதி கோபுரத்தில் திங்கள்கிழமை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 6- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விருத்தாம்பிகை சந்நிதி கோபுரத்திலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 3 புதிய கலசங்கள் திருடுபோனது கடந்த மாா்ச் 1-ஆம் தேதி அதிகாலையில் தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி திருடுபோன கலசங்களை மீட்டனா். இதையடுத்து, விருத்தாம்பிகை அம்மன் சந்நிதி கோபுரத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட 3 கலசங்களுக்கும் கோயில் சிவாச்சாரியா்கள் கடந்த 3 நாள்களாக பரிகார பூஜை செய்தனா். தொடா்ந்து விருத்தாம்பிகை சந்நிதி கோபுரத்தில் மீண்டும் கலசங்கள் பொருத்தப்பட்டன. இதையடுத்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பூஜை செய்யப்பட புனித நீரை சிவாச்சாரியா்கள் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து, மூலவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.