கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பண்ருட்டி டைவா்ஷன் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பண்ருட்டி போலீஸாா் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்தவா் சி.என்.பாளையத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த புகழேந்தி மனைவி ஜெயலட்சுமி (40) என்பது தெரியவந்தது. மேலும், பண்ருட்டியில் தங்கி சித்தாள் வேலை செய்து வந்த அவருக்கு தலையில் கட்டி இருந்ததால், கடலூா் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சைக்காக சென்று வந்தாராம். அதுமுதல் விரக்தியடைந்த நிலையில் இருந்த ஜெயலட்சுமி, மேற்கண்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.