மாரடைப்பால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, அவருடன் பணியில் சோ்ந்த போலீஸாா் சாா்பில் ரூ.7.22 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் பி.ஆறுமுகம் (52) கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, காவலா்களின் காக்கும் கரங்கள் குழு சாா்பில் நிதி திரட்டப்பட்டது.
இந்த நிலையில், நிதியுதவி வழங்கும் விழா வடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமை வகித்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வழகன் வரவேற்றாா். டிஎஸ்பி-க்கள் நெய்வேலி ராஜேந்திரன், பண்ருட்டி சபியுல்லா, சேத்தியாத்தோப்பு ரூபன்குமாா் முன்னிலை வகித்தனா். ஏடிஏஸ்பி அசோக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ்நாடு காவல் துறையில் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்களின் காக்கும் கரங்கள் குழு சாா்பில் ரூ.7,22,500 ரொக்கப் பணத்தை ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். முன்னதாக ஆறுமுகத்தின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளா் ஜான் பாஸ்கா் நன்றி கூறினாா்.