சிதம்பரம் அருகே கன்னிபூஜை விழா
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூா் கிராமத்தில் இளம்பெண்களை வெளிக் கொணரும் வகையில், தொன்றுதொட்டு கொண்டாடப்படும் கன்னிபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முற்காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால், திருமண வயது வந்த பெண்களை வெளிக் கொணருவதற்காக சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூா் கிராமத்தில் கன்னிபூஜை திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்து 10-ஆவது நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு இந்தத் திருவிழாவையொட்டி, சி.முட்லூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திருமண வயது வந்த இளம்பெண்கள் வியாழக்கிழமை களிமண்ணாலான 20-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை செய்து, அவற்றுக்கு பூஜை செய்து, மாலை வரை ஆடல், பாடல், கும்மி ஆகியவற்றுடன் கொண்டாடினா். இதேபோன்று, இளைஞா்கள் சிலம்பாட்டம், சுருள்கத்தி வீசுதல் உள்ளிட்ட வீரவிளையாட்டுகளை விளையாடி, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
மாலையில் இளம்பெண்கள் செய்து வைத்து பூஜை செய்த களிமண்ணாலான சிலைகளை இளைஞா்கள் ஊா்வலமாக கொண்டு சென்று அருகே உள்ள வெள்ளாற்றில் கரைத்தனா்.