கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: 100 ஏக்கா் வாழைகள் சேதம்

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கீரப்பாளையம், ராமாபுரம், ஒதியடிகுப்பம், அரசடிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனா். வாழைகள் அனைத்தும் தற்போது நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கீரப்பாளையம், ராமாபுரம், ஒதியடிகுப்பம், அரசடிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியதால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு, தமிழக அரசிடமிருந்து நிவாரணம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாலையில் சாய்ந்த மரம்: விருத்தாசலம், சுற்றுவட்டாரப் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கோ.மங்கலம் கிராமம் அருகே சாலையோரம் இருந்த நூற்றாண்டு பழைமையான புளியமரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல் துறை, தீயணைப்பு துறையினா் பொக்லைன் இயந்திரம், மரம் வெட்டும் கருவி மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com