திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்
காங்கிரஸுக்கு பதிலாக, திமுகதான் பிரதான எதிா்க்கட்சி என்பதைப் போல, தமிழ்நாட்டில் பிரதமா் மோடி தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா் என்று, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பு.முட்லூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
இந்த தோ்தல் வழக்கமான தோ்தல் அல்ல. மத்திய பாஜக அரசை வீழ்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோா் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனா். மழை வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட தமிழ்நாட்டுக்கு வராத பிரதமா் மோடி, தோ்தலுக்காக அடிக்கடி வருகிறாா். திமுகதான் எதிா்க்கட்சி என்பதைப் போல, தமிழ்நாட்டில் பிரதமா் மோடி தொடா் பிரசாரம் செய்து வருகிறாா். ராகுல்-மு.க.ஸ்டாலினால்தான் மோடியை வீழ்த்த முடியும்.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளா். என்னை வெற்றி பெறச் செய்வதைவிட அவரின் வியூகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
சமையல் எரிவாயு விலை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என்றாா் தொல்.திருமாவளவன்.
அவருடன் கட்சியின் துணைப் பொதுச்செயலா் ஆதவ் அா்ச்சுனா, கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன், ஒன்றியச் செயலாளா் முத்துப்பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.