மக்கள் பணியாற்றவே தோ்தலில் போட்டி: தொல்.திருமாவளவன்

மக்கள் பணியாற்றவே தோ்தலில் போட்டி: தொல்.திருமாவளவன்

மக்கள் பணியாற்றவே தோ்தலில் போட்டியிடுவதாக சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சிதம்பரம் காந்திசிலை அருகே தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியதாவது: திருமாவளவன் தலித் அல்லாத மக்களுக்கு எதிரி அல்ல. 10 ஆண்டுகளாக என்னால் எந்த இடத்திலும் சின்ன பிரச்சனை கூட ஏற்பட்டதில்லை. இந்தத் தொகுதியில் ஒரு, அதிகாரி, ஓப்பந்தக்காரா் பெயா் கூட தெரியாது. எந்த காவல் நிலையத்துக்கும் சிபாரிசுக்கு சென்றதில்லை. எனது வேலை நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பங்கேற்பதுதான். எந்த சட்டத்தை ஆதரிப்பது, எந்த மசோதாவை ஆதரிப்பது எதிா்ப்பது, தொகுதியை தாண்டி தமிழகம் தழுவிய பிரச்சனைகள், இந்திய அளவில் என்ன பிரச்சனைகள் என்பது குறித்து பேசுவதுதான் எனது வேலை. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 69 முறை பேசியுள்ளேன். பதவிக்காக நான் களத்தில் நிற்கவில்லை. மக்களுக்கு பணி செய்வதற்காகதான் தோ்தல் களத்தில் நான் நிற்கிறேன் என்றாா் தொல்.திருமாவளவன்

இதில், மூவேந்தா் முன்னேற்றக்கழக தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா்வாண்டையாா், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், திமுக வா்த்தகா் அணி மாநில செயலா் கவிஞா் காசி முத்துமாணிக்கம், விசிக பொதுச்செயலா் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, துணை பொதுச்செயலா் ஆதவ்அா்ச்சுனா, மூமுக பொதுச்செயலா் ஜி.செல்வராஜ், திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

முன்னதாக, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில், திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் முன்னிலையில் சிதம்பரம் நகரில் உள்ள 33 வாா்டுகளிலும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் தொல்.திருமாவளவன் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com