போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் மட்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நெய்வாசல் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடந்த 2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த ஆற்றின் மறுகரை அரியலூா் மாவட்டம், சன்னாசிநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் மணல் குவாரியை எதிா்த்து அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சா.சி.சிவசங்கா் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இதுதொடா்பாக சா.சி.சிவசங்கா் உள்ளிட்ட 37 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விசாரணைக்காக தற்போதைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள சா.சி.சிவசங்கா் உள்ளிட்ட 20 போ் கடலூா் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.ஜவகா் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகினா். இந்த வழக்கை வரும் ஜூன் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜவகா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சா் சா.சி.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சியில் புதன்கிழமை பேருந்து நடத்துநா் இருக்கையுடன் கீழே விழுந்த சம்பவத்தில், அந்த பேருந்து 13 ஆண்டுகள் பழைமையானது. கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. தற்போது, 7 ஆயிரம் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

350 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நிகழாண்டு இறுதிக்குள் அனைத்துப் பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போக்குவரத்துத் தொழிலாளா்களுடனான பேச்சு வாா்த்தையில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்று வருகின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com