ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம், ஏப்.26: சிதம்பரம் அருகே பொன்னங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

பொன்னங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயிலை சீரமைக்கும் பணிகளும், இந்தக் கோயிலில் வளாகத்தில் ஸ்ரீமங்களாம்பிகை அம்மனுக்கு தனி கோயில் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தன.

வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றன. காலை 7.30 மணிக்கு மேல் சூரியனாா் கோயில் திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரை 28-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீமகாலிங்க தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் முன்னிலையில், மேளதாளம் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீபூா்ண - புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரா் மற்றும் செல்லியம்மன் கோயில்களிலும், அதைத் தொடா்ந்து ஸ்ரீவெள்ளை விநாயகா் மற்றும் ஸ்ரீமங்களாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் தேவார பாடல்களை சேலம் கல்லூரி விரிவுரையாளா் அக்கராமங்கலம் இரா.பாலசுப்ரமணியன் பாடினாா். கும்பாபிஷேகத்தை சிவஞானசம்பந்த சிவாச்சாரியா், செல்வ கபில சிவாச்சாரியா் ஆகியோா் நடத்தினா். கோயில் அபிஷேக, ஆராதனைகளை ஆலய அா்ச்சகா் கண்ணன் குருக்கள் செய்தாா்.

விழாவில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com