ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறைக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் சந்தோஷ், சிறப்பு உதவியாளா் ஏழுமலை மற்றும் காவலா்கள் விருதாசலம் வட்டம், விளாங்காட்டூா் கிராமம், மாதா கோவில் தெருவில் சோதனை நடத்தினா். அங்கு விமல்ராஜ் வீட்டின் அருகில் கீற்று கொட்டகையில் சுமாா் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, விமல்ராஜிடம் விசாரணை நடத்தியதில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி, அதை பன்றி மற்றும் மாட்டுப் பண்ணைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து கடலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.