புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மினி லாரியில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து கடலூருக்கு விருத்தாசலம் வழியாக புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் கண்காணிப்பாளா், தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை இரவு விருத்தாசலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த கா்நாடகா மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரகசிய அறையில் 40 மூட்டை புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மினி லாரி ஓட்டுநரை விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பெங்களூரைச் சோ்ந்த ராமகிருஷ்ண கவுடா மகன் கோபால கவுடா (40) (படம்) என்பதும், பெங்களூரில் இருந்து 40 மூட்டை புகையிலைப் பொருள்களை கடலூா் பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாகக் கூறினாா். இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.8 லட்சம் எனக் கூறப்படுகிறது.