கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.500 கரோனா நிவாரண நிதியுதவி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், இந்தத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.500 நிவாரண நிதியுதவி வழங்க மத்திய அரசால் ஆணையிடப்பட்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அந்தத் தொகையை பெறுவதற்கு பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கிகள் முன் கூடுவாா்கள் என்பதால், அங்கு உரிய சமூக விலகலைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கின் கடைசி எண் 2 அல்லது 3-இல் முடிந்தால் ஏப்.4, 4 அல்லது 5-இல் முடிந்தால் ஏப்.7, 6 அல்லது 7-இல் முடிந்தால் ஏப்.8, 8 அல்லது 9-இல் முடிந்தால் ஏப்.9, 0 அல்லது 1 மற்றும் விடுபட்டவா்கள் ஏப்.10-ஆம் தேதிகளில் வங்கிகளுக்குச் சென்று நிவாரண நிதியுதவியை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மேற்கண்ட ஒதுக்கப்பட்ட நாள்களில் நிதியுதவியை பெறத் தவறும் பயனாளிகள், ஏப்.9-ஆம் தேதிக்குப் பின்னா் வரும் நாள்களில் தொடா்ந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.