உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்ததில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி இறந்தார், 2 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்ச மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(58) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை உறவினர்கள் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை அடுத்த செம்பியன் மாதேவி என்ற பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகசென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி நிகழ்விடத்திலேயே இறந்தார். ஆம்புலன்ஸில் உள்ளே இருந்த மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த நோயாளியின் சடலத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டவர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.